திருப்பூர்: ராயபுரம் பூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், 69ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 20ல் துவங்கியது. கள்ளழகர், ஆராவமுதன், நவமோகனக் கண்ணன், வெண்ணெய்த்தாழி கோலம், பூர்ண அலங்காரம் என, தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் வேணுகோபால கிருஷ்ண சுவாமி அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம், நம்பெருமாள் வீதியுலா மற்றும் உறியடி உற்சவம் நடந்தது. நேற்று காலை, மஞ்சள் நீருடன் விழா நிறைவடைந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூமி நீளா சமேதராக வேணுகோபால சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.