பதிவு செய்த நாள்
11
செப்
2019
12:09
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா வேடபட்டியில், உப்பை சாமியாக பக்தர்கள் வணங்கும் வினோத வழிபாடு நடக்கிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, உப்பு அரிதாகவும், காத்திருந்து வாங்கும் பொருளாகவும் இருந்தது.
கடல் பகுதியில் தயாரிக்கப்படும் உப்பை மூட்டையில் கட்டி, நுாற்றுக்கணக்கான கழுதைகளின் முதுகில் ஏற்றி, ஊர் ஊராக கொண்டு சென்று விற்பனை செய்வது, முக்கிய வியாபாரமாக இருந்தது. இந்த வியாபாரிகளை உமனர்கள் என அழைத்தனர்.தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை கிராமங்கள் தோறும் உப்பு விற்பனை நடக்கும். பல மாதங்களுக்கு தேவையான உப்பை மக்கள் வாங்கி இருப்பு வைத்தனர்.மிக உயர்வாக மதிக்கப்படும் பொருளை, கடவுளுக்கு காணிக்கையாக்குவது நமது வழிபாட்டு கலாசாரத்தில் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் உப்பும் காணிக்கை பொருளில் ஒன்றானது. மடத்துக்குளம் அருகே வேடபட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உப்புசாமி வழிபாடு உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், உடலில் ஏற்படும் மருகு, கட்டிகள் மறையவும், வலி, நோய் குணமாகவும் இங்கு வேண்டிக்கொள்வதும், நேர்த்திக்கடனாக உப்பை அள்ளி சாமி மீது துாவி வணங்குகின்றனர். இதை உப்புசாமி என அழைக்கிறோம் என்றனர்.