பதிவு செய்த நாள்
12
செப்
2019
11:09
நாகப்பட்டினம் : இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி, கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாகையில், மீனவ கிராம பெண்கள், சமுத்திர ராஜ வழிபாடு நடத்தினர்.
நாகை, அக்கரைப்பேட்டை மீனவப் பெண்கள், ஆண்டுதோறும், சமுத்திர ராஜ வழிபாடு நிகழ்ச்சியை, வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து, காக்க வேண்டும்; மீன் பிடிக்க செல்லும் குடும்பத்தினர், பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும் என்ற வேண்டுதலுடன், வாழ்வளிக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த வழிபாட்டை நடத்துகின்றனர். நேற்று நடந்த சமுத்திர வழிபாட்டில், அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில், சப்த கன்னிகளுக்கும், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.பின், ஊர்வலமாக கடற்கரைக்கு சென்று, கடல் நீரில் பாலுாற்றி, மங்கள பொருட்கள், பழங்களை போட்டு, நீராடி பெண்கள் வழிபாடு நடத்தினர்.