சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமு நாச்சியார் தர்கா அமைந்துள்ளது. இங்கு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை முதல் மறுநாள் காலை 6:00 மணிவரை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக செப்.,1ல் காப்பு கட்டுதல் நடந்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி இணைந்து மொகரம் விழாவை கொண்டாடுகின்றனர். இங்கு உருவ வழிபாடு கிடையாது. பெரிய குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும், அதே வேளையில் வெள்ளியிலான பிறை வடிவங்கள், கை கூப்பி தொழும் உருவ வடிவங்களை பல்லக்கில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது.
முன்னதாக கடந்தாண்டு பூக்குழி தரையில் தோண்டி பானையில் வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் அப்படியே இருந்தது. இம்முறை புதிய ரொட்டித்துண்டும், பானகம், மல்லிகை பூச்சரம் வைத்து பூமியில் வைக்கப்பட்டது. மாமு நாச்சியார் இருப்பிடத்தில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடந்தது. அசைவ விருந்து பரிமாறப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கையில் பச்சை பிறைக்கொடியுடன் குண்டத்தில் இறங்கினர். பெண்களின் தலையில் அனல் கங்குகள் கொட்டியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இரவில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகம் நடந்தது. கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.