வேடசந்துார்-: திண்டுக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது வேடசந்துார் தாலுகா. ரெங்கமலை கணவாய் பகுதி இவ்விரண்டு மாவட்டங்களையும் பிரிக்கிறது. இதன் அருகே 5 கி.மீ., உயரமுள்ள ரெங்கமலை உள்ளது. அதில், கீழிருந்து மூன்று கி.மீ., துாரத்தில், ‘மல்லீஸ்வர்’ கோயில் உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு கட்டுப்பட்டது இக்கோயில். ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆடி(18)ப்பெருக்கு நாளில் நடக்கும் விழாவில் திரளானோர் பங்கேற்பர். இந்த கோயிலைப்போல, திண்டுக்கல் மாவட்ட எல்லை தட்டான் தோட்டம் ரெங்கமலை அடிவாரம் பகுதியில் உருவாக்கியுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு சன்னதியாக உருவாக்கப்பட்டு விழாவும் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வார் பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் செய்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி நாளில் ரெங்கமலையை சுற்றி கிரிவலம் வருவர். மலையடிவாரத்தில் உள்ள மல்லீஸ்வரன் கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். இந்த மல்லீஸ்வரன் கோயிலுக்கு, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் ஆதீனம் சார்பில் ஒரே கல்லால் ஆன சிவலிங்கம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பக்தர் ஒருவர் வழங்கிய இச்சிவலிங்கம், ‘கங்கையில் உருண்டோடி தானாக செதுக்கியதை போல் சிவலிங்கம் உருவாகியுள்ளது. அதனை கோயிலில் வைப்பதற்காக உரிய நடைமுறைகளை செய்து தண்ணீரில் வைத்துள்ளனர். கோயில் நிர்வாகி ரமேஷ் கூறியதாவது: இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படுகிறது. ரெங்கமலையை கிரிவலம் வருவோர் இங்கு அன்னதானம் உண்டு, ஓய்வு எடுத்த பின்னரே செல்வர். மல்லீஸ்வரை வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும், என்றார். இவரிடம் 98421 51211ல் பேசலாம்.