பதிவு செய்த நாள்
14
செப்
2019
11:09
சிவகங்கை: சிவகங்கை அருகே பாசாங்கரையில் உயிர் பிரியாததால், ஜீவசமாதி அடையும் திட்டத்தை சிவபக்தர் இருளப்பசாமி 77, கைவிட்டார். இரவு முழுவதும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சிவகங்கை அருகே பாசாங்கரை சிவபக்தர் இருளப்பசுவாமி 77. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிவன் கனவில் வந்து ஜீவசமாதி அடையுமாறு கூறியதாகவும், செப்.,12 நள்ளிரவு 12:00 முதல் மறுநாள் (செப்.,13) காலை 5:00 மணிக்குள் இயற்கை மரணம் அடைந்து, சிவலிங்கத்தை கட்டி அணைத்தபடி ஜீவசமாதி அடைய உள்ளதாக அறிவித்தார். பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜீவசமாதிக்கு 10 அடி நீள, அகலமுள்ள குழிதோண்டினர். செப்.,12 இரவு சமாதி அமைய உள்ள இடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பக்தர்கள் திருவாசகம், தேவாரப்பாடல் பாடினர். மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன் உட்பட 200 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
டாக்டர் சோதனை: செப்.,12 இரவு 10:00 மணியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என செப்.,13 காலை 6:00 மணி வரை இடையமேலுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்த்குமார், சாமியின் ரத்த ஓட்டம், நாடித்துடிப்பினை பரிசோதித்தார். ஒரே சீரான ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு இருந்தது. செப்.,13 அன்று காலை 5:00 மணிக்கு பின்னரும் அவர் உயிர் பிரியவில்லை. இதனால் ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக இருளப்பசுவாமி அறிவித்தார். இரவு முழுவதும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது: அவரது இடத்தில் ஜீவசமாதி அடைவேன் என அறிவித்தது அவரது விருப்பம். பக்தர்கள் அதிகம் கூடியதால் பாதுகாப்பு கருதி எனது தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர் திட்டத்தை கைவிட்டதால், வீட்டிற்கு அனுப்பினோம்,என்றார்.