பதிவு செய்த நாள்
15
செப்
2019
02:09
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், முதல் முறையாக நேற்று, ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல்லில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விசஷே நாட்களில், தங்க கவசம், வெள்ளி கவசம் மற்றும் வடைமாலை சாற்றுப்படி, முத்தங்கி, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.ஆனால், ஆஞ்சநேயருக்கு பிடித்த வெற்றிலை அலங்காரம் இதுவரை செய்யப்படவில்லை. கோவில் நிர்வாகம், அதற்கான முயற்சியை மேற்கொண்டது. திருச்சி தில்லைபுரம் யோகராணி என்பவர், ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலைகளை கொண்டு, சுவாமிக்கு, அலங்காரம் செய்ய ஒப்புக் கொண்டார்.நேற்று முன்தினம் காலை முதல், வெற்றிலை மாலை கோர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாக்குமட்டையில் வெற்றிலையை பொருத்தி, சுவாமிக்கு சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு, நேற்று அதிகாலை, திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது. சிறப்பு அபி ஷேகம் முடிந்த பின், மதியம், 12:00 மணிக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த அலங்காரத்தில், சுவாமியை வழிபட்டால், பக்தர்களின் அனைத்து காரியங்களும் வெற்றியாகும், கல்வி அபிவிருத்தி, நோயற்ற வாழ்வு, செல்வம் கிட்டுதல், மனதில் வலிமை பெருகும் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இந்த அலங்காரம், இன்று காலை, 9:00 மணி வரை இருக்கும்.