பதிவு செய்த நாள்
16
செப்
2019
12:09
அன்னுார் : மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்தார். ‘மேலைத் திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா பிரசித்தி பெற்றது.
ஆவணி மாதத்தில் ஒரு சனிக்கிழமை, புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகள், ஐப்பசி மாதத்தில் ஒரு சனிக்கிழமை என, ஆறு சனிக் கிழமைகளில் விழா நடக்கிறது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். முதல் சனிக்கிழமை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அபிசேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை முதல் இரவு வரை வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, கருட வாகனத்தில், வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலர் அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். திருவீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ‘திருப்பதி செல்ல முடியாதவர்கள் மொண்டிபாளையம் பெருமாளை வணங்கினால், அதே பலன் பெறலாம்’ என்பது ஐதீகம். நேற்று முன்தினம் பல ஆயிரம் பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை வணங்கினர்.