பதிவு செய்த நாள்
16
செப்
2019
03:09
நன்மை அதிகரிக்கும் மாதமாக இது இருக்கும். கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் செப்.25 வரையும், செவ்வாய் செப்.26ல் இருந்தும் நன்மை தருவர். ராகுவால் மாதம் முழுவதும் நன்மை காத்திருக்கிறது. மற்ற கிரகங்கள் எல்லாம் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகமான பலன்கள் நடக்காது. செப். 26க்கு பிறகு பொருளாதார வளம் பெருகும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பத்தில் மாத முற்பகுதியில் புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபவிஷய பேச்சு நடக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.25க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். செப்.24,25ல் உறவினர் வகையில் வீண் விரோதம் வரலாம். எனவே ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் அக்.10,11ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.18,19, அக்.15,16ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பணஉதவி கிடைக்கும்.
பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். செப்.25க்கு பிறகு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும் என்றாலும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகாது. இருப்பினும் சூரியன் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிப்பிடிப்பர். செப்.26க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். அக்.7,8,9ல் சிறப்பான பலனைக் காணலாம்.
வியாபாரத்தில் ராகு பொருளாதார வளத்தையும், தொழில் வளர்ச்சியையும் தந்து கொண்டு இருக்கிறார். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் சாதக பலனைக் கொடுக்கும். புதிய வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமற்று காணப்படுவதால் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். சமூக நலசேவகர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு நற்பலனை எதிர்நோக்கலாம். கவுரவத்திற்கு பங்கம் வராது. செப்.26 க்குப் பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் நன்மை அதிகரிக்கும். பொது அறிவு வளரும், ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். செப்.25க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் அதற்குரிய வருமானம் உறுதியாக கிடைக்கும். நெல்,சோளம், பாசிபயறு, தக்காளி, பழ வகைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். கால்நடைவளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்ட சுபவிஷய பேச்சு கைகூடும். கணவனிடத்தில் அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.26க்கு பிறகு பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் தொல்லை மறையும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செப். 22,23ல் பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.30, அக்.1,2ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பண உதவி கிடைக்கும். மாத பிற்பகுதியில் புதன் சாதகமற்று காணப்படுவதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை.
* நல்ல நாள்: செப்.18,19, 22,23,28,29,அக்.1,2,7,8, 9,10,11,15,16
* கவன நாள்: அக்.3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: சிவப்பு, நீலம்
பரிகாரம்:
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
● வெள்ளியன்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை