பதிவு செய்த நாள்
16
செப்
2019
03:09
இறையருளால் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செவ்வாய் செப்.26 வரையும், சுக்கிரன் அக்.5க்கு பிறகும் நன்மை தரும் நிலையில் உள்ளனர். குரு, சனி, கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். கிரகங்களின் பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். செயலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதிப்பு, மரியாதைக்கு குறைவிருக்காது. புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். புதனால் செப்.25க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அக்.5 க்கு பிறகு பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.30, அக்.1,2ல் சகோதரிகளால் பெருமை கொள்வீர்கள். அவர்களால் நன்மை காண்பீர்கள். செப்.26,27ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அக்.7,8,9ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் வெகுவான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை செப்.26 க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் இருப்பவர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சூரியனால் இடமாற்றம் வர வாய்ப்புண்டு. செப்.24,25ல் எதிர்பாராத நன்மை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப். 25க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
வியாபாரிகளுக்கு சனிபகவான் பொருளாதார வளத்தையும், தொழில் வளர்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறார். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். எதிரிகளால் தொல்லை வரலாம். அக்.5க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். செப்.28,29, அக்.3,4ல் சந்திரனால் தடைகள் வரலாம். அக்.12,13,14ல் அதிர்ஷ்டவசமாக பணவரவை எதிர்பார்க்கலாம். பகைவர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அக்.5க்கு பிறகு நற்பலன் காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். செப்.26 க்கு பிறகு பிரதிபலன் பாராமல் உழைக்க நேரிடும். அக்.10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். செப். 25க்கு பிறகு அதிக சிரத்தையும், விடாமுயற்சியும் தேவைப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.
விவசாயிகள் நல்ல பலன் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல், மஞ்சள், கோதுமை, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். பாசிப்பயறு தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்களின் கை குடும்பத்தில் ஓங்கி நிற்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். உங்களால் குடும்பம் சிறக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பணிக்கு செல்லும் பெண்கள் தங்களின் கோரிக்கைகளை செப்.26 க்குள் கேட்டு பெறவும். வெளியில் பல விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
அக்.5,6ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம் செப்.18,19, அக்.15,16 அனுகூலமான நாட்களாக அமையும். உடல் நலனில் அக்கறை தேவை.
* நல்ல நாள்: செப்.18,19,24, 25,26,27,30, அக்.1,2,5,6,12,13,14,15,16
* கவன நாள்: செப்.20,21, அக்டோபர் 17 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
● கார்த்திகையன்று முருகனுக்கு நெய் தீபம்