மதுரை அழகர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகரை உலகமே அறியும். கி.பி. 1510 மற்றும் அதையொட்டிய காலகட்டத்தில் நாட்டில் கலவரங்கள் அடிக்கடி தோன்றியதால் கள்ளழகர் உற்சவ விக்ரகத்தைப் பாதுகாப்பதற்காக திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடிக்கு எழுந்தருளச்செய்தனர். அழகரின் திருநட்சத்திரமான ஆடி உத்திராடத்தன்று அங்கு கள்ளழகருக்கு உற்சவம் கொண்டாடி மகிழ்ந்தனர் அவ்வூர் மக்கள். அன்று திருவீதி உலா வரும் கள்ளழகருக்கு பல்வேறுவிதமாக நைவேத்யம் செய்து கண்டருளப் பண்ணினர்.
ஓர் ஏழை மூதாட்டி தன்னிடம் எந்த வசதியும் இல்லாததால் தன்னிடம் இருந்த காணப்பருப்பை வறுத்துப் பொங்கலாக்கி, வேலிகளில் படர்ந்திருந்த கொடிகளிலிருந்து சில காத்தொட்டிக்காய்களைப் பறித்து வந்து மசியல் குழம்பு செய்து கள்ளழகரை தன் குடிசை வீட்டுக்குள் அமர்ந்து தியானம் செய்தார். கீழ ரதவீதி சன்னதி தெரு இணையும் இடத்திலிருந்து கள்ளழகர் வந்த பல்லக்கு எப்படி அசைத்தும் அசைய மறுத்துவிட்டது. நேரம் ஆக ஆக அர்ச்சகர் கள்ளழகரை நினைத்து மனதார உருகி, நாங்கள் செய்த பிழையாதென வினவ, ""இத்தெருவில் ஒரு மூதாட்டி என் மீது தூய பக்தி கொண்டு எளிய நிலையிலும் எனக்காக காணப்பருப்பு பொங்கலும், காத்தொட்டிக்காய் மசியலும் செய்துள்ளார். அதனையே இன்று நைவேத்தியம் செய்தால் மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்வேன்” என்று கள்ளழகர் சொல்ல, அம்மூதாட்டி செய்த பிரசாதங்களை கள்ளழகருக்கு நிவேதனம் செய்த பின்னரே பல்லக்கு அவ்விடத்திலிருந்து நகர்ந்து திருக்கோயிலுக்குச் சென்றது. இதன் நினைவாக இன்றும் திருக்குறுங்குடியில் ஆடி மாதம் உத்திராடத்தன்று காணப் பயறு பொங்கலும், காத்தொட்டிக்காய் கறியமுதும் நைவேத்தியமாக செய்யப்பட்டு, திருக்குறுங்குடி நம்பிக்கு படைத்து கள்ளழகர் சம்பந்தமான பிரபந்தங்களை சேவித்து கோஷ்டியினருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.