கடலூர் அருகே உள்ள திருவஹிந்திரபுரத்தில் பிறந்தவர் வேதாந்த தேசிகர். இவர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரின் மூலமந்திரம் ஜபித்து, அவரை நேரில் தரிசிக்கும் பேறு பெற்றவர். இத்தலத்தில் உள்ள குன்றின் மீது ஹயக்ரீவர் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு தேசிகர் வந்த போது, குன்றின் அடிவாரத்தில் உள்ள தெய்வ நாயகப் பெருமாள் தன்னையும் தரிசிக்க வரச் செய்து அருள்புரிந்தார். அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காத்த இவருக்கு ’தேவநாத சுவாமி’ என்றும் பெயருண்டு. இந்தக் கோயிலில் உள்ள உற்ஸவர் பெயர் ’மூவராகிய ஒருவன்’. மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழும் இவர், பிரம்மாவுக்குரிய தாமரை, சிவனுக்குரிய நெற்றிக்கண், ஜடாமுடி விஷ்ணுவுக்குரிய சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார்.