பதிவு செய்த நாள்
18
செப்
2019
01:09
சிதம்பரம், சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜசபையில் திருமணம் நடத்தியது தொடர்பாக, தீட்சிதர்களிடம், டி.எஸ்.பி., நேற்று விசாரணை நடத்தினார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், 11ம் தேதி, சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலதிபர்கள் இல்லத் திருமணம் நடந்தது.
ராஜசபையை, நட்சத்திர ஓட்டல் போல் அலங்கரித்திருந்தனர்.சஸ்பெண்ட்இதற்கு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், பொது தீட்சிதர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, செயலர் பாலகணேசன் தலைமையில் நடந்த, பொது தீட்சிதர்கள் கூட்டத்தில், திருமண விழா தொடர்பாக, பட்டு தீட்சிதருக்கு, 1,001 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; 60 நாட்கள் கோவில் பணியில் இருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராஜசபையில் திருமணம் நடத்தியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 14ம் தேதி, பா.ஜ., இளைஞரணி மாநில பொருளாளர் கோபிநாத் கணேசன், சிதம்பரம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சிதம்பரம், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களை, டி.எஸ்.பி., அலுவலகம் வரவழைத்து, நேற்று விசாரணை நடத்தினர். தவறு தான்!பட்டு உள்ளிட்ட ஏழு தீட்சிதர்கள் மற்றும் புகார்தாரர் கோபிநாத் கணேசன் விசாரணைக்கு ஆஜராகினர்.ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில், ராஜசபையில் திருமணம் நடத்தியது தவறு தான். மரபு மீறப்பட்டதற்கு, சம்பந்தப்பட்ட பட்டு தீட்சிதருக்கு, பொது தீட்சிதர்கள் அமைப்பு சார்பில், தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என, தீட்சிதர்கள் எழுதிக் கொடுத்தனர்.திருமணம் நடத்திய தொழிலதிபர்களை, வரும், 23ம் தேதி, போலீஸ் விசாரணைக்கு அழைத்து வர வேண்டும் என, தீட்சிதர்களுக்கு, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.