திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருமலையில் வருடம் முழுவதும் திருவிழாதான் என்றாலும் வருடத்தி்ற்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா பெருவிழாவாகும். இதற்கு முக்கிய காரணம் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனே விழாவினை நேரில் வந்து நடத்துவதாக உள்ள ஐதீகம்தான். வானவில் தனது வடிவம் முழுவதையும் காட்ட வந்ததோ அல்லது வர்ணஜாலங்கள் கோலமிட்டு நின்றதோ என வியக்கவைக்குமளவிற்கு எங்கும் பொங்கும் அலங்காரத்தால் திருமலை பூலோக வைகுண்டம் போல ஜொலிக்கும்.
விலை உயர்ந்த நகைகள் அணிந்து விதவிதமான வாகனங்களில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் மாடவீதிகளில் உலாவருவது கண்கொள்ளாக்காட்சியாகும். சுவாமியை தரிசிக்கவும் சுவாமிக்கு முன் பாட்டுப்பாடி நடனமாடிச் செல்லும் பல்வேறு மாநில கலாச்சார மக்களின் நடனங்களை பார்வையிடவும் உலகமெங்கும் இருந்து பக்தர்கள் திரள்வர். அதிலும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான்று கருட சேவையின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். கருட சேவையில் வரும் பெருமாளுக்கும், மோகினி அவதாரத்தில் தந்த பல்லக்கில் எழுந்தருளும் பெருமானுக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சூடித்தான் வலம்வருவார்கள், ஆண்டாளின் மாலையை கொண்டுவந்து சாத்தும் வைபவமே தனி.
பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்: 30 09 2019: மாலை கொடியேற்றம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா 01 10 2019: காலை சின்ன சேஷ வாகனம் இரவு ஹம்ச வாகனம் 02 10 2019: காலை சிம்ம வாகனம் இரவு முத்துபல்லக்கு வாகனம் 03 10 2019: காலை கற்பகவிருட்ச வாகனம் இரவு சர்வபூபாள வாகனம் 04 10 2019: காலை மோகினி அவதாரம் இரவு கருட வாகனம் 05 10 2019: காலை அனுமன் வாகனம் மாலை தங்கரதம் இரவு யானை வாகனம் 06 10 2019: காலை சூரியபிரபை வாகனம் இரவு சந்திர பிரபை வாகனம் 07 10 2019: காலை தேரோட்டம் இரவு குதிரை வாகனம் 08 10 2019: காலை சக்ரஸ்நானம் மாலை கொடிஇறக்கம் நிகழ்ச்சி நிறைவு