திருப்புவனம் : மடப்புரத்தில் எலுமிச்சை மாலை விலை கிடு கிடுவென உயர்ந்திருப்பதால் பக்தர்கள் தவித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி , ஞாயிறுகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மடப்புரம் பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம்.கோயில் முன் ஏராளமான எலுமிச்சை மாலை கடைகள் உள்ளன. 51 பழம் கொண்ட மாலை முதல் 501 பழம் கொண்ட மாலைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆடியில் கூட 51 பழங்கள் கொண்ட ஒரு மாலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 51 பழங்கள் கொண்ட மாலை 300 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: மதுரை மார்க்கெட்டில் இருந்து எலுமிச்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றோம், 4 ஆயிரம் பழங்கள் கொண்ட ஒரு மூடை எலுமிச்சை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரமாக உயர்ந்து விட்டது. இதனால் எலுமிச்சை மாலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தான் மதுரை மார்க்கெட்டிற்கு எலுமிச்சை பழங்கள் அதிகளவில் வருகின்றன. வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது, என்றனர்.