பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
ஈரோடு: புரட்டாசி முதலாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்கள் களை கட்டின. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்த மாதம். இம்மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், அக்ரஹாரவீதி அய்யர் பெருமாள் கோவில், காவிரிக்கரை ஆதவன் மாதவன் கோவில், பெருமாள் மலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், கோபூஜை, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கோபி பெருமாள் கோவில் வீதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதேபோல் பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி கோவில்புதூரில், பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. கரிவரதராஜ பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில், தாசர்களுக்கு, தங்கள் நிலங்களில் விளைந்த அரிசி, பருப்பு மற்றும் தக்காளி, கத்தரிக்காய், புளி உள்ளிட்ட காய்கறிகளை படைத்து, மக்கள் வழிபாடு செய்தனர். ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர் மாவட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர். கருட வாகனத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், பெருமாள் எழுந்தருளினார்.
* பவானிசாகர் அருகே, அண்ணா நகர், கதிர் பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள, 36 அடி ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
* சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம் ஆதிநாரயண பெருமாள் கோவில், முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம், அணியரங்கப்பெருமாள் கோவில், வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம்பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில், சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப மகா விஷ்ணு கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இவற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாள் சுவாமியை வழிபட்டனர்.