ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில் 2:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரை கூடலழகர் கோயில் ராஜா பட்டர் மற்றும் ரகு பட்டர் செய்தனர். இதை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசித்த பக்தர்கள் பத்மாவதி தாயார் மற்றும் வேணுகோபால் சன்னிதிகளிலும் தரிசித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திகடன்களை செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் கிரிவலம் நடந்தது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையில் 250க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.