பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
தர்மபுரி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.
தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, முத்துப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோவில், மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில், கோட்டை பரவாசுதேவர்கோவில் உட்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கனவாய்பட்டி வெங்கட்ரமணர் கோவில், பெரியமலை பெருமாள் கோவில், ஐகுந்தம் பெருமாள் கோவில், ஜெகதேவி மண்மலை பெருமாள் கோவில் மற்றும் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, ராயக்கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று காலை முதல் பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து தங்களை வேண்டுதலை நிறைவேற்றினர்.
* புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, வேலூர் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையத்தில் உள்ள, வெங்கடேச பெருமாளுக்கு, வெள்ளி கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், பிரம்மபுரம் சஞ்சீவராயபுரம் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள், காட்பாடி ஆஞ்சநேயர் கோவில், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள பெருமாள் மற்றும் குடியாத்தம் மீனூர் மலையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.