திருப்பதியில் தினமும் அதிகாலையில் யமுனாத்துறையில் இருந்து பூமாலைகள் எடுத்து வரப்படும். இதனை ஜீயங்கார், ஏகாங்கி என்னும் இருவர் கூடையில் சுமந்து கருவறைக்குச் செல்வர். அதற்கு முன் முரசு அறைந்தபடி ஒருவர் வேகமாக முன்னே செல்ல, இருவரும் பின்தொடர்வர். ஜீயங்காரைத் தொடர்ந்தபடி பள்ளியெழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ சூக்த மந்திரம் ஜபிக்க இருவர் என அர்ச்சகர்கள் பின் தொடர்ந்து செல்வர். பெருமாளுக்குரிய தோமாலை, பூலாங்கி மாலைகள் பூக்கூடையில் இடம் பெற்றிருக்கும். (தோளில் அணிவிக்கும் நீண்ட பூமாலையே தோமாலா. பூலாங்கி என்பது பூவால் செய்த ஆடை) கருவறையில் உள்ள அர்ச்சகர் முதலில் பெருமாளின் திருமார்பில் உள்ள மகாலட்சுமி தாயாரை பூச்சரத்தால் அலங்கரிப்பார். பின்னர் தோமாலையும், பூலாங்கியும் பெருமாளுக்கு சாத்தப்படும். அலங்காரத்தின் போது பள்ளியெழுச்சி, திருப்பாவை, சூக்த மந்திரம் பாடப்படும். அதன் முடிவில் தீபாராதனை காட்டப்படும். இதை தரிசிக்கும் பக்தர்களின் கண்ணுக்கும், காதுக்கும் விருந்தாக அலங்காரம், திருப்பாவைப் பாசுரம் அமைந்திருக்கும்.