பதிவு செய்த நாள்
24
செப்
2019
11:09
தஞ்சாவூர்: தஞ்சை அருகே புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா, 74வது தெப்போற்சவம் கோலகலாமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லுாரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இக்கோவிலில் உள்ள அம்மன் புற்றுமண்ணால் ஆனாது. இதனால் அபிஷேகம் எதுவும் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா, கடந்த ஆக்ஸ்ட் மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒரு மாத காலம் நடைபெறும் திருவிழாயொட்டி, சாமி வீதி உலாவும், கடந்த 15ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 17ம் தேதி கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம், நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. தெப்ப திருவிழாவையொட்டி, மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாதஸ்வர கச்சேரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். தெப்ப விடையாற்றி விழா இன்று (24ம் தேதி)யுடன் விழா நிறைவு பெறுகிறது.