பதிவு செய்த நாள்
24
செப்
2019
12:09
காஞ்சிபரம்: அத்தி வரதர் வைபவத்தின்போது, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களுக்கு ரசீது போடாமல், கையாடல் செய்யப்பட்டிருப்பதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 17ல் முடிந்தது. இந்நிகழ்வில், 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். வைபவத்தின்போது, நாள்தோறும், அத்தி வரதருக்கு, பல வண்ணங்களில் பட்டாடைகள் அணிவிக்கப்பட்டன. அந்த பட்டாடைகள் தற்போது யாரிடம் உள்ளது, முறையாக ரசீது போடப்பட்டு அவை சுவாமிக்கு செலுத்தினரா என்பது குறித்து, கேள்வி எழுந்தது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், வரதராஜ பெருமாள் கோவில் பொது தகவல் அலுவலருக்கு மனு செய்திருந்தார். ஆனால், அவர்கள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வரதர் கோவில் செயல் அலுவலர், தியாகராஜனுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பினார். அதில், ‘முறையாக தகவல் அளிக்காததால், உங்கள் மீது, ஏன், குற்ற வழக்கு தொடர கூடாது. இது குறித்து, 7 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், செயல் அலுவலர் பதில் அளிக்காததால், விஷ்ணு காஞ்சி போலீசில், நேற்று, டில்லிபாபு புகார் அளித்தார்.
அவர் அளித்துள்ள புகார் மனு விபரம்: அத்தி வரதர் வைபவத்தின் போது, ஒவ்வொரு நாளும் அணிவிக்கப்பட்டு வந்த, பட்டு வஸ்திரங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான இதர பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்த வஸ்திரங்கள், ரசீது போட்ட பிறகே, சுவாமிக்கு அணிவிக்கப்பட வேண்டும் என்பது அறநிலையத் துறை விதி. ஆனால், திட்டமிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு வஸ்திரங்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவில் செயல் அலுவலர், தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து, வஸ்திரங்களை மீட்டு, கோவிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.