பதிவு செய்த நாள்
24
செப்
2019
01:09
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், நவராத்திரி என்றும், வடமாநில், தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா ஒரு நாள் மட்டுமல்ல, ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி சிறப்பாக நடக்கும். நவராத்திரி விழா அனைத்து விதத்திலும் சிறப்பு பெற்றுள்ளது. குழந்தைகளிடம் ஆன்மிக சிந்தனை வளர்க்கவும், அவர்களுக்கு கடவுள் அலங்காரம் செய்துவது, உறவுகள், அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டும் வகையில், கொலுவுக்கு அழைத்து கலாசாரத்தை மீட்டெடுக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
கொலு அமைப்பு: நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில், ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகிறது. கொலு அமைக்கும் பகுதியை விசாலமான இடத்தில், மலர்களால் அலங்கரித்து படிக்கட்டுகள் அமைக்கப்படுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் படிக்கட்டாக முன்னேறி இறைவனை சென்றடைய வேண்டும். இதுவே மனித பிறப்பின் அடிப்படை தத்துவமாகும். இத்தத்துவத்தை விளக்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
கடைசி படிக்கட்டில், மஞ்சள் பிள்ளையார் வைத்து கொலு அடுக்க துவங்க வேண்டும். முதலாவது படிக்கட்டில், ஓர் அறிவு உயிர்களான புல், செடி, கொடி தாவர பொம்மைகள் வைக்கின்றனர்.இரண்டாம் படியில், இரண்டறிவு உயிர்களான நத்தை சங்கு, மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரின பொம்மை; அடுத்ததாக மூன்று அறிவு உயிர்களான கரையான், எறும்பு பொம்மையும்; நான்கு அறிவு உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகளும்; ஐந்து அறிவு கொண்ட ஆமை, தவளை, மிருங்கள், பறவைகள் பொம்மைகள் அடுத்தடுத்த படியில் வைக்கப்படுகிறது.ஆறாம் படியில், ஆறு அறிவு கொண்ட மனிதன், மரப்பாச்சி பொம்மைகள்; ஏழாம் படியில் மனித நிலையில் இருந்து உயர்நிலை அடைந்த சித்தர்கள், ரிஷிகள்; எட்டாம் படியில் தேவர்கள், தேவதைகள், நவகிரக அதிபதிகள், அஷ்டலட்சுமி பொம்மைகள் இடம் பெறும். ஒன்பதாம் படியில், பிரம்மா, விஷ்ணு, சிவன் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி பொம்மை வைக்க வேண்டும்.கொலு முன் அமர்ந்து அம்மன் பாடல்களை பாடி, ஒவ்வொரு நாளும் பிரசாதம் படைத்து வழிபடுவர்.
பக்தி கதைகளை சொல்வதால் குழந்தைகளிடம் சிறு வயதில், ஆன்மிக சிந்தனைமற்றும் கலைகளை வளர்க்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.கொலு பார்க்க வாங்க என உறவுகள் மட்டுமின்றி, அண்டை வீட்டார்களையும் நட்பு பாராட்டி அழைத்து கொண்டாடப்படுகிறது. நட்புணர்வு, உறவுகளை வளர்க்கும் விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட, பொள்ளாச்சி மக்கள் தயாராகி விட்டனர்.வரும், 29ம் தேதி நவராத்திரிவிழா துவங்க உள்ளதால், தேவையான கொலுபொம்மைகள் வாங்கமக்கள் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.
விற்பனைக்கு வந்தாச்சு: பொள்ளாச்சி சர்வோதையா சங்கத்தில், நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் விற்பனைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மும்மூர்த்தி, அஷ்ட லட்சுமி, கல்யாண செட், குகன் ஓடம், சூர்ய ரதம், வளைகாப்பு, வேத மூர்த்திகள், தசாவதாரம் அம்மன் சிலைகள், மீனாட்சி கல்யாணம் என விதி விதமான, 38 வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை, 315 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரை உள்ளது. இந்தாண்டு ஸ்பெஷலாக, அத்திவரதர் கொலு பொம்மையும் விற்பனைக்கு வந்துள்ளது.