மதுரை மீனாட்சி (அக்., 5ல்) சக்கர தானர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
திருமால் தினமும் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வந்தார். அவரது பக்தியை உலகறியச் செய்ய விரும்பினார் சிவன். அதற்காக ஒருநாள் பூஜைக்காக இருந்த ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்தார். இதையறியாத திருமால் ஒவ்வொரு மலராக எடுத்து சிவநாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் ஒரு மலர் குறையவே, பூஜை தடைபடாதிருக்க தன் கண்ணையே தாமரையாக கருதி அர்ச்சித்தார். இதைக்கண்டு மகிழ்ந்த சிவன், திருமாலுக்கு கண்ணை வழங்கியதோடு ‘தாமரைக் கண்ணன்’ என்றும் அழைத்தார். வலிமையான சுதர்சனம் என்னும் சக்ராயுதத்தையும் பரிசாக வழங்கினார். இதனால் சிவனுக்கு சக்கரதானர் என பெயர் ஏற்பட்டது.இக்கோலத்தை தரிசித்தால் எதிரி பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
பாடவேண்டிய பாடல்: குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையார் சூழவந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.