காளி என்றாலே நினைவுக்கு வருவது கோல்கட்டா தான். நவராத்திரி பண்டிகையை இங்கு துர்காபூஜை காளிபூஜை என்னும் பெயரில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை நாளில், வீடுகளிலும் துர்காதேவியின் மண் சிலைகளை வைத்து வழிபடுவர். துர்காதேவியை கோல்கட்டா மக்கள் தங்கள் மகளாகக் கருதுகின்றனர். நவராத்திரியின் போது, புகுந்த வீடான இமயமலையில் இருந்து, தாய் வீடான மேற்கு வங்கத்திற்கு அம்பிகை வருவதாக ஐதீகம். இந்த நாட்களில் காலை, நண்பகல், இரவு நேரத்தில் பழம், இனிப்பு வகை படைத்து துர்கையை வழிபடுவர். நண்பகல் பிரசாதத்தில் கிச்சடி என்னும் பொங்கல் இடம் பெற்றிருக்கும். பூஜையின் கடைசி நாள் பிறந்த வீட்டு சீதனத்துடன், வெற்றிலை, பாக்கு கொடுத்து துர்கையை வழியனுப்புவர். அதன்பின், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்து விடுவர். அடுத்த ஆண்டு நவராத்திரிக்கு தேவி மீண்டும் தங்கள் வீட்டு பூஜைக்கு வர வேண்டும் என வேண்டுவர்.