வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு நாவில் இடம் கொடுத்தார் பிரம்மா. அதனால் அவள் ’ நாமகள் ’ என பெயர் பெற்றாள். படித்ததின் அடையாளம் நல்லதை மட்டும் பேச வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒருவரின் படைப்பாற்றல் நன்மைக்காக மட்டும் பயன்பட வேண்டும் என்பது தான். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி, திருமாலின் மார்பில் குடியிருக்கிறாள். பொருள் தேடுபவன் நல்ல மனம் படைத்தவனாக இருக்க வேண்டும். இரக்கமுடன் மற்றவருக்கு உதவ வேண்டும் என்பதை லட்சுமி உணர்த்துகிறாள். வீரம் என்பது உடல் முழுதும் பரவியிருக்க வேண்டும் என்பதற்காக வீரத்தை வழங்கும் பார்வதி, தலை முதல் பாதம் வரை சிவனின் சரிபாதியாக (அர்த்தநாரி) இருக்கிறாள்.