பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
சத்தியமங்கலம் : பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை அதிகாலை, குண்டம் இறங்கும் விழா நடக்கிறது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக் கோவில், தமிழகம் மற்றும் கர்நாடக மக்களிடையே மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும், இக்கோவிலில் நடக்கும் குண்டம் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதிப்பது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி இரவு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, சப்பரத்தில் பண்ணாரி மாரியம்மன், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதியுலா முடிந்து, கடந்த செவ்வாய்க்கிழமை பண்ணாரி கோவில் வந்தது. இதைத் தொடர்ந்து, கோவிலில் கம்பம் நடும் விழா நடந்தது. குண்டம் விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல், நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு நடக்கிறது. இன்று இரவு பத்து மணிக்கு மேல், தெப்பக்குளத்தில் இருந்து பூ மற்றும் தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் செய்து, கோவில் முன்புள்ள குண்டத்தில் வேப்பமரம் மற்றும் ஊஞ்சல் மரத்தில் தீ வளர்க்கப்பட்டு, அதில், முதலில் தலைமை பூசாரி சேகர் இறங்கி தீ மிதித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பார். தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பார்கள். இதற்காக, அமைக்கப்பட்டுள்ள வரிசையில், நேற்று காலை முதலே பக்தர்கள் தீ மிதிப்பதற்காக காத்துள்ளனர். இந்தாண்டு, தீ மிதித்துவிட்டு, நேராக பண்ணாரி அம்மனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழாவை முன்னிட்டு, இன்று மதியம் 2 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை பண்ணாரி வழியாகச் செல்லும், தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது.