பதிவு செய்த நாள்
10
அக்
2019
12:10
திருப்புத்துார்: திருப்புத்துார் கோயில்களில் குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி அம்பு எய்தலுடன் நவராத்திரி விழா நிறைவடைந்தது.திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், பூமாயிஅம்மன் கோயில், நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களில் கடந்த செப்.29 ல் நவராத்திரி விழா துவங்கியது. கோயில்களில் உற்ஸவர் அம்பாள் பலவித அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திருத்தளிநாதர் கோயிலில் மாலை 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். பின்னர் தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து நான்கு திசைகளிலும் அம்பு எய்தலுடன் விழா நிறைவடைந்தது.பூமாயி அம்மன் கோயிலில் பிரகாரத்தில் கொலு அமைக்கப்பட்டு தினசரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிறைவு நாளன்று அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை வலம் வந்து ஆறு முறைஅம்பு எய்தி விழா நிறைவடைந்தது.நின்ற நாராயணன் பெருமாள் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு தினசரிகொலு மண்டபத்தில் அம்பாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஒன்பதாவது நாளன்று பெருமாள் கோயிலில் வெண்ணெய்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார்.தேவகோட்டை
நேற்று முன்தினம் ஆயுத பூஜை அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. விஜயதசமியன்று போருக்கு சென்று வெற்றி பெற்று திரும்புதல் என்ற நிகழ்ச்சி நடப்பது மரபு. அதன்படி தேவகோட்டையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர், மும்முடிநாதர், கோதண்டராமர், கிருஷ்ணன், ஆகிய கோவில்களிலிருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனங்களில் சிவன் கோயில் கிழக்கு பகுதியில் மகர்நோன்பு திடலுக்கு வந்தனர்.சுவாமிகள் மூன்று முறை சுற்றி வந்து வானத்தை நோக்கி சுவாமிகள் சார்பில் பூஜாரிகள் அம்பு விட்டனர். அம்பை எடுத்தால் நல்ல காரியங்கள் வீடுகளில் நடக்கும் என்பதால் அம்புகளை மக்கள் போட்டி போட்டு எடுத்தனர். தீபாராதனைக்கு பின் ஒவ்வொரு சுவாமியும் பிரியா விடை பெற்று சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரி
எஸ்.வி.மங்கலத்தில் ஐந்துநிலை தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆத்மநாயகி உடனாகிய ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த29ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 9 நாட்களாக தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. பத்தாம் நாள் சிவனும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாதீஸ்வரர் என்ற சந்திர சேகர் சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்து கூந்தலுடைய அய்யனார் கோயிலை அடைந்தது. அங்கு சுவாமி 4 முறை வில்லால் அம்பு எய்துசூரனை வதம் செய்யும்நிகழ்ச்சி நடைபெற்றது.* முறையூர் மீனாட்சி-சொக்கநாதர் கோயிலில் அம்மன் அம்பு விடும் விழா நடந்தது.மீனாட்சி-சொக்கநாதர் கோயிலில்நவராத்திரி திருவிழா கடந்த29ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 9 நாட்களாக தினமும் அன்னபூரணி, மகாலட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கவுரி பூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசுர மர்த்தினி, லட்சுமி, என பல்வேறு அவதாரங்களில் மீனாட்சி அம்மன் 9 நாள் கொலுவில் பல்வேறு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் நாள் மீனாட்சி அம்மன் குதிரைவாகனத்தில் தேரோடும் வீதி வழியாக மந்தை திடலுக்கு வந்தடைந்தார். அதன் பின்பு சாமி 4 முறை வில்லால் அம்பு எய்துசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி: காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.கோவிலுார் கொற்றவாளீஸ்வரர், கொப்புடையம்மன், செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள், நகர சிவன்கோயில் சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. நவராத்திரி நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் கொப்புடையம்மன் பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.இரவு 8:00 மணியளவில், அம்பாள் வில் அம்புடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு அத்திமரத்து காளிகோயில் வீதி வழியாக மகர்நோன்பு பொட்டலை வந்தடைந்தார். இதேபோல கோவிலுார் கொற்றவாளீஸ்வரர், நகரச்சிவன் கோயில் சுந்தரரேஸ்வரர், செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள் நேற்று இரவு குதிரை வாகனத்தில் வருகை தந்து தொடர்ந்து இரவு 11:00 மணியளவில் நான்கு சுவாமிகள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.