பதிவு செய்த நாள்
10
அக்
2019
03:10
சென்னிமலை: சென்னிமலையில், நவராத்திரி விழா இறுதி நாளான, நேற்று முன்தினம் 8ம் தேதி முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்று, சூரனை வதம் செய்தார்.
நவராத்திரியை முன்னிட்டு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த ஒன்பது நாட்க ளாக கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரியின் கடைசி நாளான, நேற்று முன்தினம் 8ம் தேதி மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 5:30 மணிக்கு அசுரனை வதம் செய்வதற்காக கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது வள்ளி, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர். சுவாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர்.
அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவம் தலைமையில், முருகப்பெருமான் மற்றும் வள்ளிதெய்வானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வண்ணாசூரன் என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது. அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி, வண்ணாசூரனை மூன்று முறை வலம் வந்து, மீண்டும் வள்ளி, தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.