பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
பல்லடம்: பல்லடம் காரண பெருமாள் கோவிலில், மழையிலும், உற்சவ மூர்த்தி கோவிந்தா கோஷம் முழங்க குடையுடன் வலம் வந்தார். புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், சனிக்கிழமை வழிபாடு விமரிசையாக நடந்து வந்தது.
நேற்று, பல்லடம் பனப்பாளையம் காரணப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது. அதை முன்னிட்டு, இரவு, 8 மணிக்கு, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா புறப்பட்டார். திருவீதி உலா முடிந்து, கோவிலுக்கு திரும்புவதற்குள், மழை பெய்ய துவங்கியது. மழை அதிகரித்த நிலையில், பக்தர்கள் உற்சவ மூர்த்தியை வேகமாக இழுத்து வந்தனர். மழையால், உற்சவமூர்த்தி நனையாமல் இருக்க வேண்டி, பக்தர்கள் குடையால் பாதுகாப்பு அளித்தனர். பக்தர்களும், அர்ச்சகர்களும், மழையில் நனைந்த நிலையிலும், கோவிந்தா கோஷம் முழங்க, உற்சவ மூர்த்தியை நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். சமீப நாட்களாக கோவில்களின் மழை வேண்டி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, மழை வந்து குளிர்வித்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காரணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.