பதிவு செய்த நாள்
14
அக்
2019
01:10
திருவேற்காடு: புரட்டாசி பவுர்ணமியையொட்டி, கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி விழா நடந்தது. திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில், புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முதல், நிறைமணி விழா பூஜைகள் நடக்கின்றன. அதில், கோவிலின் மூலஸ்தானத்தின் முன், காய்கறி, தானியம், பழம், எண்ணெய், இனிப்பு, குளிர்பானங்கள் ஆகியவை, கட்டி வைக்கப்பட்டு, பசுமையாக உள்ளன.
மேலும், மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பசியின்றி வாழ வேண்டும். மழை, விவசாயம், இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிறைமணி பூஜை நடத்தப்படுகிறது. மூன்றாவது நாளான நாளை, அந்த பொருட்கள் மூலம், உணவு சமைத்து, அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாகவும், பழம் மற்றும் இனிப்புகள், பிரசாதமாகவும் வழங்கப்படும். சென்னை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், நிறைமணி விழா பூஜையில் பங்கேற்கின்றனர்.