பதிவு செய்த நாள்
15
அக்
2019
11:10
ஆர்.கே.பேட்டை: கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரமாண்டமான மலையின் உச்சியில், அருள்பாலிக்கும் வெங்கடேச பெருமாளுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில், கிராமத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அருகே, பலிஜி கண்டிகையையொட்டி, பாவலுாரு கண்டிகை என்ற கிராமம் உள்ளது. கிராமத்தின் வடக்கு மற்றும் தெற்கில், பிரமாண்டமான மலைகள் உள்ளன.வடக்கில் உள்ள மலை மீது, வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில், இந்த மலைக்கோவிலில் சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மலையில் ஏராளமான சுனைகள் உள்ளன. சுனை நீரில் இருந்து, பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதற்கான தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதே சுனை நீரில் இருந்து பிரசாதமும் தயாரிக்கப்படுகிறது.
கரடு முரடான மலைப்பாதை வழியாக, பக்தர்கள் அபிஷேகம் மற்றும் பிரசாத பொருட்களை தலைசுமையாக கொண்டு வருகின்றனர். மலை மீது தற்காலிக மடப்பள்ளியில், பிரசாதம் தயாரித்து, பெருமாளுக்கு பக்தர்கள் படைக்கின்றனர். இந்த, மெகா படையலுக்கு எந்தவிதமான பிரத்யேக பாத்திரங்களையும் பயன்படுத்துவது இல்லை.தயாரிக்கப்படும் பிரசாதம், மலையில் சமதளமாக உள்ள பாறையில் கொட்டி கிண்டப்படுவது சிறப்பு. இந்த பிரசாதத்தின் சுவைக்காகவே பெரும்பாலானோர் வருகை தருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டுமே இது வாய்க்கும் என்பதால், 1,000 அடி உயரத்தில், மலை மீது அருள்பாலிக்கும் பெருமாளை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. கோவிலும், அதில் வீற்றிருக்கும் மூலவரும் சாதாரணமாக காட்சியளித்தாலும், இவரின் மகிமை மலை முழுவதும் வியாபித்திருக்கிறது என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.