திருமாலின் அவதாரங்களில் ஆவேச அவதாரமாக விளங்குவது நரசிம்மம். இரணியனை சம்ஹாரம் செய்த பின்னும், அவருக்கு கோபம் தணியவில்லை. லட்சுமி விரைந்து வந்து கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள். பிரகலாதனும் அவரருகே வந்து நின்றான். இதனால், சூரியனைக் கண்ட பனி போல, கோபம் மறைந்து சாந்தமாக மாறினார். லட்சுமிதேவியைத் தன் மடியில் அமர்த்தி அருள்புரிந்தார். இதனால் அவருக்கு ‘மாலோலன்’ என்ற சிறப்புப் பெயர் உண்டானது. நரசிம்மருக்குரிய கோலங்கள் அனைத்திலும் லட்சுமி இடம்பெற்றிருப்பாள். யோகநரசிம்மராக விளங்கும்போது, மார்பில் யோகலட்சுமியாகவும், உக்ரவடிவில் காட்சிதரும்போது வீரலட்சுமியாகவும், சாந்தநிலையில் மடியில் அமர்ந்து சாந்தலட்சுமியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஆந்திராவிலுள்ள அகோபிலத்தில் மாலோல நரசிம்மரைத் தரிசிக்கலாம்.