கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை ‘காவேரி’ என்று சொல்வது தான் நடைமுறை வழக்கம். இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? காவேரியின் தந்தை பெயர் கவேர மகரிஷி. ராஜரிஷியான அவரது மகள் என்பதால் அவரது பெயரால் ‘காவேரி’ என்று பெயர் பெற்றாள். தமிழில் ‘காவிரி’ என்கிறோம். ‘கா’ என்றால் ‘சோலை. செல்லும் இடமெல்லாம் சோலைவனமாக மாறும் வகையில் தன் அகலத்தை விரித்துக்கொண்டே போனதால் கா‘விரி’ ஆனது. விநாயகர் காக வடிவெடுத்து அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விட்டதால் ஏற்பட்ட பெயராலும் ‘காவிரி’ என்று பெயருண்டு. ‘காக்கா விரித்ததால் (தட்டி விட்டதால்) கா ‘விரி’ என்னும் பெயர் வந்தது. இப்படி, காவிரி நதியின் பெயருக்கு பல காரணங்கள் உண்டு.