பதிவு செய்த நாள்
22
அக்
2019
11:10
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடற்கரைக்கோவிலில் மூடியிருந்த, கருவறை சன்னிதிகள், தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், பயணியர் அவற்றை கண்டு, மகிழ்ச்சி அடைகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கலை சிற்பங்களை காண, பயணியர் இங்கு வருகின்றனர்.இச்சிற்பங்களின் தொல்லியல் தன்மை கருதி, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு, இவற்றை, பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து உள்ளது.வழிபாடு இல்லைஇங்குள்ள கடற்கரை கோவிலை, ராஜசிம்மன் என்றழைக்கப்படும், இரண்டாம் நரசிம்மவர்மன், சைவ, வைணவ வழிபாடு கருதி, தனித்தனி சன்னிதிகளுடன், பாறைகளில் அமைத்து உள்ளார். கிழக்கு நோக்கிய, பெரிய கோபுரத்துடன் கூடிய சன்னிதி, கருவறையில், சேதமடைந்த சிவலிங்கம், சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம்; சுவற்றின் வெளிப்புறம் சிற்பங்கள் என, இக்கோவிலில் உள்ளது.மேற்கு நோக்கிய, சிறிய கோபுரத்துடன் கூடிய சன்னிதி, கருவறையில் சிவலிங்கம் அகற்றி, சுவற்றில், சோமாஸ்கந்தர் சிற்பம், வெளிப்புறம் சிற்பங்கள் என, அமைந்துஉள்ளன.
இவ்விரு சன்னிதிகள் இடையில், விமான கோபுரம் இன்றி, ஸ்தலசயன பெருமாள் சன்னிதி உள்ளது. பெருமாளிற்கு, இங்குள்ள பாறையிலேயே, 9 அடி நீள சிலை, படுத்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.கருவறை மூடப்படும்இக்கோவிலில், பல நுாற்றாண்டுகளாக வழிபாடு இல்லை. பாரம்பரிய சின்னமாக இருப்பதால், அதன் அழகை, சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.கடற்கரை பகுதி கோவில் என்பதால், கடற்காற்றின் உப்புத்தன்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றால், சிற்பங்கள் உருக்குலைந்து சீரழிகின்றன. தவிர, கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் பயணியர், சிற்பங்களை தொடுவதால், மண் கலவையால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் சேதமாகின.இதனால், 2017 ஜனவரியில் இருந்து, சன்னிதியில் பயணியர் செல்ல, தடை ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ல், முறைசாரா மாநாட்டு பேச்சிற்காக, இங்கு சந்தித்தனர்; சிற்பங்களை ரசித்தனர். இவர்கள் காண கருதி, சன்னிதிகள் கருவறை பகுதி திறக்கப்பட்டது. தற்போதும் திறந்திருப்பதால், இங்கு குவியும் பயணியர், கருவறை சுவாமியர், உட்பிரகார சிற்ப கலையம்சங்களை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். சில நாட்களில், கருவறை மூடப்படும் என, தெரிகிறது.