பேராசைக்காரன் ஒருவனிடம் தேவதை ஒன்று காட்சியளித்து, “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றது. “நான் தொட்டதெல்லாம் பொன்னாக மாற வேண்டும்” என்றான். தேவதையும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தது. மகிழ்ச்சியில் துள்ளிய அவன், வீட்டுக்கு ஓடோடிச் சென்றான். கட்டில், மெத்தை, கதவு, ஜன்னல், சுவர், பெட்டி என அத்தனையையும் தொட்டான். எல்லாம் பொன்னாக மாறியது. இங்கும் அங்கும் ஓடியதில் களைப்பும், பசியும் வந்தது. சாப்பிட அமர்ந்தான். தட்டில் உணவை வைத்தாள் மனைவி. உணவைத் தொட்டதும் அதுவும் பொன்னாக மாறியது. என்ன செய்வான்? பசியால் வாடியவன், “ஐயோ! என் நிலை இப்படி ஆகி விட்டதே? என்ன செய்வேன்?” என்று அழுதபடி மனைவியின் கைகளைப் பிடித்தான். அவளும் பொன் சிலையாகி நின்றாள். அப்போது தான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற உண்மை அவனுக்கு புரிந்தது. பசி போக்க வழியின்றி கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தான். ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? “ஜீவன் உள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடர வேண்டும்” என பிரார்த்திப்போம்.