தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி படைகளுடன் தங்குமிடம் ’படைவீடு’ எனப்படும். அவ்வகையில் சூரனை வதம் செய்ய முருகன் படையுடன் தங்கிய தலம் திருச்செந்தூர் மட்டுமே. ஆனால், மற்ற தலங்களையும் சேர்த்து ’ஆறுபடை வீடு’ என்கிறோம். வறுமையில் வாடுவோரிடம் வள்ளல் இருக்குமிடத்தை சொல்லி வழிகாட்டுவது அக்கால வழக்கம். அந்த வகையில் அமைந்த நூல்களை ’ஆற்றுப்படை’ என்பர். இவ்வாறு பக்தர்களின் குறைகளைப் போக்கும் வள்ளலான முருகன் ஆறு தலங்களில் அருள்புரிகிறார் என சங்கப்புலவர் நக்கீரர் நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, ’திருமுருகாற்றுப்படை’ (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, ’ஆறுபடை’ என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.