பதிவு செய்த நாள்
07
நவ
2019
04:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம், பட்டர் தோப்பைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 56. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு செப்டம்பர், 6ல், ஸ்ரீரங்கம் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சோதனை நடத்தினார்.தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், ரெங்கநாதர் கோவில் சுவாமி சன்னிதிகளில் வெறும் கூடையை வைத்து பூஜை செய்வதாக புகார் கூறினார். மேலும், பட்டாச்சார்யார்கள் கூடைகளில், நைவேத்திய பிரசாதம் இல்லாமல், பெருமாளுக்கு படைப்பதாகவும், மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் ரங்கராஜன் வெளியிட்டார்.
இந்நிலையில், கோவில் பற்றியும், அறங்காவலர்கள், நிர்வாகிகள் பற்றியும், ரங்கராஜன், சமூக வலைதளங்களில், தொடர்ந்து அவதூறு பரப்புவதாக, கோவில் இணை ஆணையர் ஜெயராமன், ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். அவதூறு பரப்புதல், கலகம் விளைவித்தல் உட்பட, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார், நேற்று ரங்கராஜனை கைது செய்து, திருச்சி, ஜே.எம்., 3 நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரித்த மாஜிஸ்திரேட், ரங்கராஜனுக்கு அறிவுரை கூறி, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.