பதிவு செய்த நாள்
07
நவ
2019
04:11
ராசிபுரம்: ராசிபுரத்தில், கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி, வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 10 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல், உருளைதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது. முடிவில், பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், மேலும் குழந்தை வரம் வேண்டியும், தொழில் விருத்தி அடையவும் கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையால், மூன்று அடி வாங்கி சென்றனர். அம்மன் சாட்டையால் அடி வாங்கினால், நினைத்தது நிறைவேறும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதிகாலை நடந்த இந்நிகழ்ச்சியில் ராசிபுரம், பட்டணம், புதுப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். * இதேபோல் ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.