பதிவு செய்த நாள்
08
நவ
2019
01:11
பெ.நா.பாளையம்:சின்னத்தடாகம் வட்டாரத்தில் நேற்று (நவம்., 7ல்) பெய்த கனமழையால், பொன்னுாத்த ம்மன் கோவில் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வரப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பொன்னுாத்தம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அம்மன் அருகே இருந்து, கடும் கோடையிலும் வற்றாத சுனை நீர் வருவது பிரசித்தம்.மாதந்தோறும் அமாவாசையன்று சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறும். நேற்று (நவம்., 7ல்) மாலை கோவிலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் கனமழை பெய்தது.
இதனால், கோவில் வளாகத்தில் இருந்த அருவியில் நீர் வெள்ளமென கொட்டியது. கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள், பலர் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.இது குறித்து, பக்தர்கள் கூறுகையில்,’ பல ஆண்டுகளுக்கு முன், பருவமழையின் போதுதான், இப்படி அருவியில் நீர் கொட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், அருவியில் சிறியளவில் நீர் வந்தது. தற்போது, வெள்ளமென அருவியில் நீர் கொட்டுகிறது.
இது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அருவியில் மேலும் சில நாட்கள் தண்ணீர் வரும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, நம்பிக்கை தெரிவித்தனர்.