தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் பழமையான ஓலைச்சுவடிகளை ‘டிஜிட்டல்’ மயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளன. டில்லி தேசிய சுவடி இயக்கம் தமிழ்நாடு அரசு மின்நுாலகத் திட்டம் பிரிட்டிஷ் நுாலகம் ஆகியவற்றின் நிதியில் தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் உள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழில் உள்ள 4500 ஓலைச்சுவடி கட்டுகள், சமஸ்கிருதம் – 1000 கட்டுகள், பாலி மொழி – ஒரு கட்டு, தெலுங்கு – 50 கட்டு, கன்னடம் – ஏழு, கட்டு என 6000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி கட்டுகள் டிஜிட்டலாக்கப்படுகிறது.
தமிழ் ஓலைச்சுவடியில் உள்ள சிற்றிலக்கியம் மருத்துவம் ஜோதிடம் பாட்டும் தொகையும் மெய்கண்ட சாத்திரம் தத்துவம் என 18 பிரிவுகளில் சுவடிகள் பிரிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழ் பல்கலை ஓலைச்சுவடி துறைத் தலைவர் கோவை மணி கூறியதாவது: டில்லி தேசிய சுவடிகள் இயக்கம் சார்பில் தமிழ் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான சுவடிகளை டிஜிட்டல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ் பல்கலையில் உள்ள சுவடிகளை பாதுகாக்க ஆண்டுதோறும் 7 லட்சம் ரூபாய் நிதி வழங்கி தமிழகத்தில் இரண்டாவது சுவடிகள் பாதுகாப்பு மையம் உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நுாலகம் அழியும் நிலையில் உள்ள ஆவணங்களை காக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் பல்கலையில் உள்ள சுவடிகளை பாதுகாக்க இரண்டு ஆண்டுகளில் இந்திய மதிப்பில் 48.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.