பதிவு செய்த நாள்
09
நவ
2019
01:11
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஒரு கோடி ரூபாய் செலவில், முன் மண்டபம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.
இங்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், அமாவாசை, செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரம் பக்தர்களும் வருகின்றனர்.இக்கோவிலுக்கு உண்டியல் காணிக்கை, கடை ஏலம் மூலம் ஆண்டுக்கு, ஏழு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இக்கோவில் முன் மண்டபத்தில், சிம்ம வாகன சிலை அருகே பெண்கள் எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த மண்டபத்தின் மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது.இதை ஆய்வு செய்த கோவை அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் குழுவினர், பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி, மண்டபத்தை இடிக்கும்படி கூறினர். அதன் பேரில் கடந்த, 2018ம் ஆண்டு மே மாதம் முன் மண்டபத்தின் மேல்கூரை இடிக்கப்பட்டது.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, முன் மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறாமல் இருந்ததால், பக்தர்கள் வெய்யிலில் சிம்ம வாகனம் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் நன்கொடையாளர் மூலம் தற்போது முன் மண்டபம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. நேற்று கோவிலில் நடந்த பூமி பூஜையில், கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் ஷர்சினி, இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.உதவி செயற்பொறியாளர் பழனிசாமி கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவிலில், முன் மண்டபம் கட்ட பூமி பூஜை நடந்தது. தற்போதுள்ள, 16 துாண்களை எடுத்து விட்டு, புதிதாக துாண்கள் அமைத்து, 42 அடி அகலம், 58 அடி நீளத்தில், முன் மண்டபத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டி கொடுக்க நன்கொடையாளர் முன் வந்துள்ளார், என்றார்.