பதிவு செய்த நாள்
12
நவ
2019
11:11
சென்னை : ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில், சொக்கநாதருக்கு நேற்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அனைத்து ஜீவன்களுக்கும் உயிர் நாடி அன்னம். அதுவே, பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன.
இதன் அடிப்படையிலேயே, ஒவ்வொரு ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.சில கோவில்களில், ஐப்பசி பவுர்ணமி, அஷ்வினியில் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, வடபழநி முருகன் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, சொக்கநாதர் சன்னிதி காய்கறி, பழங்களால் அலங்கரிக்கப்பட்டன. 121 வேத விற்பன்னர்களால் ருத்ர பாராயணம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு, மூலவர் சொக்கநாதர் சுத்த அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்திருந்தனர்.