பிரமாண்டமான அன்னாபிஷேகத்தை அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியன்று காணலாம். தென்திசையில் ஒரு கயிலாயம் அமைக்க எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். அதே பாணியில் இங்கு பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினார் ராஜராஜனின் மகன் ராஜேந்திரச்சோழன். தஞ்சையிலுள்ள லிங்கம் 12.5 அடி உயரம், 55 அடி சுற்றளவு கொண்டது. அதை விட சற்று கூடுதலாக 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லால் ஆன சிவலிங்கத்தை இங்கு நிறுவினார். வடநாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினார். பொற்குடங்களில் கங்கை தீர்த்தம் எடுத்து வந்து கும்பாபிஷேகம் நடத்தினார். இதனால் இத்தலம் கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் பெற்றது.
இங்குள்ள கருவறையில் இருபுறமும் ஆறடி உயரத்தில் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறை குளிர்ச்சியாக இருக்கும் விதத்தில் சந்திரகாந்தக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய தனி சன்னதியில் 9.5 அடி உயரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சிங்க வடிவில் உள்ளதால் சிம்மக்கிணறு எனப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், பிரம்மா, திருமால், சரஸ்வதி, சண்டேஸ்வர அனுக்கிரக மூர்த்தி, பைரவர் சிற்பங்கள் காண்போரை கவரும் விதத்தில் உள்ளன. இக்கோயிலில் நவ.12ல் ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது. 25 சிவாச்சாரியார்கள் ஒன்றுகூடி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 100 மூடை அரிசியாலான அன்னத்தால் அபிஷேகம் செய்வர். மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனையும், அதன் பின் அதிரசம், எள்ளுருண்டை, தேன்குழல், முறுக்கு ஆகியவற்றால் சிவலிங்கத்தை அலங்கரிப்பர். நள்ளிரவு 1:00 மணி வரை வத்தல் குழம்புடன் அபிஷேக அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
* எப்படி செல்வது? கும்பகோணம் – சென்னை சாலையில் 35 கி.மீ.,