பதிவு செய்த நாள்
12
நவ
2019
05:11
தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவிலில், பிரகதீஸ்வருக்கு ஆயிரம் கிலோ அளவில், தயாரிக்கப்பட்ட சாத்ததாலும், 500 கிலோ காய்கறிகளாலும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில், ராஜராஜசோழனால் (கி.பி.985 -–1012) கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் 12 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 65 அடி சுற்றளவு உடையது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில், அன்னாபிஷேம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அன்னாபிஷேகத்திற்காக,பக்தர்களாக வழங்கப்பட்ட 1000 கிலோ அளவிலான அரிசியை கொண்டு காலை 9 மணி முதல் மடப்பள்ளியில், சாதம் வடிக்கப்பட்டது. அர்த்தமண்டபத்தில், காய்கறி,பழங்கள் மற்றும் இனிப்பு வகையிலான அலங்காரத்திற்கு தயார் செய்யப்பட்டது.
பின்னர், மாலை 4.30 மணிக்கு பிரகதீஸவருக்கு, 1000 கிலோ சாதத்தாலும், 500 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரிக்கப்பட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்காண பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு லிங்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் வழங்கப்பட்டன. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணை கால்வாயில் நீர்வள உயிரினங்களுக்கு வழங்கப்பட்டன. இது குறித்து சிவச்சாரியர்கள் கூறியதாவது; இவ்வுலகில் வாழம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது அன்னம். இதை படைத்தருளிய இறைவன் ஈசனுக்கு நன்றி சொல்லும் விதத்தில், அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. லிங்க வடிவில் வீற்றிருக்கும் ஈசனுக்கு அன்னத்தினால் செய்யப்படுகின்ற அபிஷேகத்தை தரிசித்து, அந்த பிரசாதத்தை உண்ணும் பக்தர்களுக்கு நோய்கள் மற்றும் வறுமை அகலுதோடு உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயமும் செழித்தோங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்றனர்.