சிங்கம்புணரி: பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது. ஐப்பசி பவுர்ணமி அன்று நடைபெறும் இந்த அன்னாபிஷேகத்தினால் மழை அதிகம் பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.நேற்று காலை 10:00 மணிக்கு திருக்கொடுங்குன்றநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னம், காய்கனிகளை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
பூஜைகளை பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் செய்தார். சிறப்பு வழிபாட்டில் உதவி கோட்ட பொறியாளர் குமரன், நேர்முக உதவியாளர் நீளமேகம், தேவஸ்தான பேஸ்கார் கேசவன், செந்தில், சண்முகம், கணேசன், சோமதினகரன், உமாமணி உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பிரான்மலை அன்னாபிஷேக குழுவினர் செய்திருந்தனர். சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அரவங்கிரி என்ற அரளிப்பாறையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மலைக்குகையில் உள்ள அண்ணாமலையாருக்கு ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. பின்னர் மலைக்குகையில் அமைந்துள்ள அண்ணாமலையாருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோன்று சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில், சதுார் வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றுது.