சென்னை கந்தாஸ்ரமத்தில் எல்லா சன்னதிகளிலுமே பிரமாண்ட விக்ரகங்கள் உள்ளன. சாந்தானந்த சுவாமிகளால் அமைக்கப்பட்ட மூலவர் சிவன் சகஸ்ர லிங்கமாக இங்கு இருப்பது சிறப்பு.
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது இயற்பெயர் சுப்ரமணியம். இவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் கந்தாஸ்ரமம் எனப் பெயர் பெற்றன. சேலத்திலும், சென்னையிலும் இவர் கந்தாஸ்ரமத்தை அமைத்தார். 2002 மே 27ல் மகா சமாதி அடைந்தார்.
தஞ்சை பிரகதீஸ்வரரை விட உயரமான பாணம் கொண்ட சகஸ்ர லிங்கம் இங்குள்ளது. பாணம் என்பது லிங்கத்தின் ஆவுடையாருக்கு மேலே உள்ள பாகம். தஞ்சாவூரில் பாணம் 7 அடி 6 அங்குலம். இங்கு 8 அடி 1 அங்குலம். இதில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 லிங்கங்கள் உள்ளன.
பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1008 லிங்கமாகும். இதன் எடை 20 டன். நந்தியின் உயரம் 6 அடி. கோபுரங்கள் ஒரிசா மாநில பாணியில் உள்ளன. பஞ்ச லோகத்தால் ஆன பிரமாண்ட ஐயப்பன் இங்கு உள்ளார்.
ஐந்து முகம் கொண்ட ஹேரம்ப கணபதி 12 அடி உயரத்தில் சிங்க வாகனத்தில் இருக்கிறார். சுவாமிநாத சுவாமி 12 அடி உயரத்தில் வலது கையில் தண்டமும், இடது கையை இடுப்பில் வைத்தும் இருக்கிறார். வாயு மூலையில் 12 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். சனி தோஷம் அகல இவரை வணங்குகின்றனர். 10 அடி உயர பிரத்யங்கிரா தேவி சிம்ம வாகனத்துடன் 10 அடி உயரத்தில் காட்சி தருகிறாள். இவளை அமாவாசையன்று வழிபட்டால் எதிரிபயம் தீரும். தினமும் காலையில் பிரத்யங்கிரா கோடி ஹோமம் நடக்கிறது.
19 அடி உயர பஞ்சலோக சுதர்சனரும், பின்புறம் லட்சுமி நரசிம்மரும் உள்ளனர். மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயர் 12 அடி உயரத்தில் இங்குள்ளார். பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் 12 அடி உயரத்தில் சனி பகவான் காக வாகனத்தில் உள்ளார். கோயிலின் நடுவே ஐந்தடி உயர பஞ்சலோக மகாமேரு உள்ளது. புவனேஸ்வரி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். தினமும் காலையில் கோபூஜையும், மாலையில் துர்கா சப்தசதி பாராயணமும் நடக்கிறது.