ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களை அழைத்தார்.‘‘நம் நிறுவனத்தின் மேலாளர் பதவிக்காலம் இன்னும் ஆறுமாதத்தில் முடியப்போகிறது. அவருக்குப் பிறகு உங்களில் ஒருவரை மேலாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளேன். மாதம் 5 லட்சம் சம்பளம். உங்கள் நடவடிக்கைகளை இந்த ஆறுமாதமும் கூர்ந்து கவனிப்பேன். யார் தகுதியுடையவர் எனக் கருதுகிறேனோ, அவரே மேலாளர் ஆவார்,” என்றார்.ஐந்து லட்சம் சம்பளம், கார், பங்களா வசதியெல்லாம் கிடைத்தால் யார் விடுவார்...ஊழியர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். பலர் வேலைநேரம் முடிந்த பிறகும், ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்வது போல் நாடகமாடினர்.ஆறுமாதம் கழிந்தது. அன்று தான் மேலாளர் பதவிக்குரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். எல்லார் மனதிலும் திக் திக்..ஒரே ஒருவரைத் தவிர. அவர் வழக்கம் போல், தன் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரருகே சென்ற தலைவர், “நீங்கள் தான் இனி நிறுவனத்தின் மேலாளர்” என்றார்.எல்லாருக்கும் சப்பென்றாகி விட்டது.‘‘ஐயா! நாங்கள் எவ்வளவு கடுமையாகப் பாடுபட்டோம், அதிலும் இந்த ஆறுமாத காலத்தில் எவ்வளவு துõரம் போராடினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரோ, வழக்கமான பணியைத் தான் செய்தார். அவரைப் போய் தேர்ந்தெடுத்தீர்களே!” என்றனர்.‘‘ஊழியர்களே! அவர் எட்டு மணி நேரத்துக்குள் 16 மணி நேர வேலையை முடிப்பவர். நீங்களோ 16 மணிநேரம் வேலை செய்தும், நான்கு மணி நேர வேலையைக் கூட நல்லபடியாக செய்யவில்லை என்பதை உங்கள் வேலைக்குறிப்பு எடுத்துச் சொல்கிறது. மேலும், பதவியைத் தேடி அவர் ஓடவில்லை. ஆசைப்படவும் இல்லை. ஆசையில்லாத ஒருவரால் தான், கம்பெனியின் நிதிநிர்வாகத்தையும் மோசடி ஏதுமின்றி செய்ய முடியும். அவர் அவராகவே இருந்தார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார்.குறிப்பிட்ட நேரத்தில், தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும். பதவியும், பணமும் தேடி வரும்.