பதிவு செய்த நாள்
14
நவ
2019
11:11
சிவகங்கை: பூமிப்பந்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் காலடி பட்டு தேய்ந்த இடமெல்லாம் இன்று வரலாற்று மாணவர்களுக்கு பாடமாகி கொண்டிருக்கிறது. அதற்கு கீழடியும் ஒரு சான்று. முச்சங்கம் அமைத்து முத்தமிழ் வளர்த்த தமிழர்களின் கலாசாரம் பண்பாட்டை அறிய ஏடு, இலக்கியம், கலை, கோயில் என ஏராளம் உண்டு. இயற்கை சீற்றங்களால் அழிந்து போன, அன்னியர் படையெடுப்புகளால் மறைந்து போன தமிழர்களின் அடையாளங்கள் ஏராளம்.
அதில் ஒன்றாக சிவகங்கை அருகே பண்ணை திருத்தி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சிவன் கோயில் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தேரோட்டம் நடந்ததும், 500 ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயில் காணாமல் போனதுடன்,அங்கு வசித்த மக்கள் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்ததும் தெரிய வந்துள்ளது.
கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட இக்கிராமத்தில் தற்போது 150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள 225 ஏக்கர் கண்மாயில் பழங்கால மக்கள் குடியிருப்பும், சிவன் கோயில் ஒன்றும் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்மாய் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. இக்கண்மாயில் தற்போது சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சதுரவடிவ ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும், அதை நோக்கியவாறு பழமையான நந்தி சிலையும் உள்ளது. அங்கிருந்து 100 அடி துாரத்தில் ஒற்றை துவாரபாலகர் சிலை சீமைக்கருவேல மரங்களுக்கு மத்தியில் உள்ளது. இது தவிர பழமையான கோயில் சிற்பங்கள் கண்மாய் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. பழைய சிவன் கோயிலில் இருந்த யாழி உள்ளிட்ட பழமையான சிலைகள் அய்யனார் கோயிலில் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. இக்கண்மாய் பழூர் மேடு என்று அழைக்கப்பட்டதாகவும், இங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வசித்ததாகவும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். கண்மாய் முழுவதும் பழங்கால பானை ஓடுகள், முதுமக்கள் தாழியின் ஓடுகளும் சிதறி கிடக்கின்றன. கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
புயல்ராஜன், பண்ணைதிருத்தி: பழூர்மேடு என்றழைக்கப்படும் அந்த இடத்தில் சிவன்கோயில் இருந்ததாகவும், தேரோட்டம் நடந்ததாகவும் பெரியவர்கள் கூறுவார்கள். எங்கள் முன்னோர்கள் அங்கு வசித்தவர்கள் தான். பலர் மதுரை, சேலம், பவானி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். சிவராத்திரி தினத்தன்று மட்டும் அய்யனார் கோயிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். என்ன நடந்தது, சிவன் கோயில் என்ன ஆனது, மக்கள் ஏன் இடம் பெயர்ந்தார்கள் என்ற விபரம் தெரிவில்லை. தொல்பொருள் துறையினர் அகழாய்வு நடத்தினால் நிறைய தகவல் வெளிவரும், என்றார். கீழடியை போல், பண்ணைதிருத்தியை போல் பல இடங்களில் உலகை ஆண்ட தமிழர்களின் வெளிவராத வரலாறு மண்ணுக்குள் உறங்கிக்கொண்டுதான் உள்ளது. அவற்றை வெளிக்கொண்டுவரும் பணியை தொல்பொருள் துறையினர் தொடங்க வேண்டும்.