பதிவு செய்த நாள்
14
நவ
2019
12:11
பெ.நா.பாளையம்:கோவை புறநகர் பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத, பவுர்ணமி நாளன்று, இறைவனை அன்னத்தால் அலங்கரித்து வழிபட்டால், செல்வமும், சுபிட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 12ல்) மாலை 5:00 மணிக்கு, கலச பூஜையும், பல்வேறு திரவியங் களால் அபிஷேக பூஜையும் நடந்தது.இரவு 7:00 மணிக்கு, மன்னீஸ்வரருக்கு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையடுத்து மன்னீஸ்வரருக்கு படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மன்னீஸ்வரரை அன்ன அலங்காரத்தில் தரிசித்து பரவசம் அடைந்தனர்.
* இடிகரையில் உள்ள வேதநாயகி அம்பாள் உடனமர் வீல்லீஸ்வரமுடையார் கோவிலில் நேற்று முன்தினம் (நவம்., 12ல்) மாலை, 4:00 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்கியது. 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கும்பஸ்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி வீல்லீஸ்வரர் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சிறுமுகையை அடுத்த குத்தாரிபாளையத்தில் கரு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அன்னா பிஷேகம் பூஜை நடந்தது. 60 கிலோ அரிசியில் பொங்கல் சாதம் வைத்து, சுவாமி அழகு படுத்தினர். அதன் பிறகு சிறப்பு பூஜை செய்த பின், அன்னாபிஷேகத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதேபோல் மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அன்னாபிஷேக பூஜை நடந்தது.இதில் ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.