இராமானுஜர் பகுதி 25 | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

இராமானுஜர் பகுதி 25

மே 23,2016



ஸ்ரீமத்ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்தார். அதில் கடைசி 60 வருடங்கள் ஸ்ரீரங்கத்திலே இருந்து விட்டார். இறுதியாக ஸ்ரீரங்கநாதனிடம் இந்த உடலில் இருந்து விடுதலை கேட்டார். ஸ்ரீரங்கநாதன் முதலில் மறுத்தாலும் பின்னர் சரி என்று பதிலளித்தார். அந்த நாள் சந்தோஷமாக மடத்திற்கு வந்து தன்னுடைய விருப்பத்தை சிஷ்யர்களுக்கு சொன்னார். அவர்களுக்கு அடக்க முடியாத துக்கம் வந்தது. ராமானுஜர் அவர்களை சமாதனப்படுத்தி அவர்களனைவரையும் இரவில் அழைத்து சந்தித்து தனது சரமச்செய்தியை இவ்விதமாகக் கூறினார்.

நீங்கள் மந்திரோபதேசம் செய்த குருவினை எவ்வாறு கவுரவிப்பீர்களோ அவ்வாறு ஸ்ரீவைஷ்ணவர் (விஷ்ணு பக்தர்)களை கவுரவிக்க வேண்டும். பூர்வாசிரியார்களின் உபதேசங்களை முழுமையாக நம்பவேண்டும். நீங்கள் எப்பொழுதும் இந்திரியங்களுக்கு அடிமையாகக் கூடாது. லோக ஞானத்தில் திருப்தி கொள்ளக்கூடாது. பகவானின் அனந்த கல்யாண குணங்கள், அவருடைய படைப்புகளில் உள்ள தொடர்புகளை குறிப்பிடும். கிரந்தங்களை தினமும் படித்தல் வேண்டும். உங்கள் குருவின் மூலம் ஞானோதயம் ஏற்பட்டால் உங்களிடமுள்ள தீயக்குணங்கள் தானாக குறைந்து விடும். உங்களுடைய விருப்பங்களை ஆலோசனைகளை அலட்சியம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

பகவான் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் எப்படி செய்கிறோமோ அதேபோல் பக்தர்கள் மீதும் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் செய்தல் வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்பவர்கள் துரிதமாக பகவான் பாதையை சேர்வார்கள். பகவானுக்கு, பக்தர்களுக்கு சேவைகள் செய்யாவிட்டால் மோட்சம் கிடைக்காது. ஸ்ரீவைஷ்ணவராக பிறத்தலால் மட்டும் எவ்விதமான நன்மைகள் இல்லை. குடும்ப பாசபந்தங்களிலிருந்து விடுபட்டு பகவான் நினைவாகவே இருத்தல் வேண்டும்.

உங்களுக்கு உபதேசம் செய்த குருவின் மகிமைகளை தினமும் ஒரு மணி நேரமாவது நினைத்தல் வேண்டும். தினந்தோறும் ஆசாரியர் மற்றும் ஆழ்வார்கள் திவ்ய கிரந்தங்களை படித்தல் வேண்டும். பிரபத்திமார்க்கத்தில் இருப்பவர்களை நண்பர்களாக செய்து கொள்ளுதல் வேண்டும். பிரபத்தி மார்க்கமல்லாத மார்க்கத்தில் செல்லுதல் கூடாது. செல்வம் சேர்க்கின்றவர்களுடனும், தீய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடனும் நட்பு கூடாது. பகவானிற்கு சேவையை செய்யும் பக்தர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். குலம் பிரிவினை பார்த்து ஒருவரை மதிப்பிடக்கூடாது. திவ்ய தேசங்களில் உள்ள விக்ரஹங்களை வெறும் சிலைகளாகவும், நமக்க மந்திரோபதேசம் கற்று கொடுத்த குருவினை வெறும் மனிதனாகவும், பக்தர்களின் பாபங்களை போக்குகின்ற ஸ்ரீபாத தீர்த்தத்தினை வெறும் நீராகவும், சர்வஜகத் நாராயணனை இதர தெய்வங்களுடன் ஒப்பிடுபவர்கள் நரகத்திற்கு செல்லுவார்கள் என்பதை உணர வேண்டும்.

எங்களுடைய இறுதி காலத்திற்கு முன்னர் வரை நாங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிஷ்யர்கள் கேட்க அதற்கு இராமாநுஜர் பதிலளித்தார்.

முழுமையாக தெய்வத்தை நினைப்பவர்கள் தம்முடைய வருங்காலத்தை நினைத்தல்கூடாது. நீங்கள் பகவானின் சொத்து. ஆகையால் அவரே உங்களுடைய நன்மை, தீமைக்கு முழுபொறுப்பாவார். உங்களுக்காக நீங்களே வருந்தினால் அது எதற்கும் உதவாமல் போய்விடும். அது உங்களிடம் உள்ள குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தும். உங்கள் வாழ்க்கை உங்களுடைய பூர்வ ஜென்ம கர்மத்தின் அடிப்படையில் அமைகிறது. அதில் அவனைப் பற்றி அறிய வேண்டிய அவசியமில்லை. உங்கள் பணிகளை உங்கள் கடமைகளுக்காக மட்டுமல்லாமல் பகவத் சேவையின் பகுதியாக நினைத்தல் வேண்டும்.

ஸ்ரீபாஷ்யம் படித்து மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும். இது மிகவும் பகவானுக்கு விருப்பமான ஒன்றாகும். இது சாத்தியமில்லாத போது சடகோப முனிவர் எழுதிய இதர கிரந்தங்களை படித்து, தகுந்த சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது. இது சாத்தியமில்லாதபோது புண்ணிய க்ஷேத்திரங்களில் பகவத்சேவை செய்தல் வேண்டும். இது சாத்தியமில்லையெனில் ஓர் குடில் அமைத்து அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். இதுவும் முடியவில்லையெனில் நீங்கள் இருக்குமிடத்தில் த்வய மந்திரத்தை ஜபித்து கொண்டிருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட எதுவும் சாத்தியமில்லையெனில் பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ள ஸ்ரீவைஷ்ணவரிடம் சென்று உங்களிடம் அவருடைய தயை இருக்கும்படி நடந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு துளி கோபம், அகந்தை கூட இல்லாமல் அவர்கள் சொல்லுவதை செய்தல் வேண்டும். இதுவே மோட்சத்தின் மார்க்கம்.

தொலைநோக்குப் பார்வையால் உங்களுடைய நண்பர்கள், பகைவர்கள், உதாசிணப்படுத்துபவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். விஷ்ணு பக்தர்கள் உங்களுடைய நண்பர்கள். பகவானை நினைக்காதவர்கள் உங்களுடைய பகைவர்கள் (அ) எதிரிகள். உலக வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்பவர்கள் உதாசிணப்படுத்துபவர்கள். உங்கள் நண்பர்களை பார்த்தால் நிறைந்த தாம்பூல தட்டினை பார்த்தது போல் மகிழ வேண்டும். பகைவர்களைப் பார்த்தால் அக்னி நல்லது திருடனைப் பார்த்ததுபோல் பயப்பட வேண்டும். ஸ்ரீவைஷ்ணவரோடு இருப்பது உங்களுக்கு ஆன்மீக உயர்நிலையை அளிக்கும். நீங்கள் பகைவர்களுடன் ஒரு பொழுதும் பழக வேண்டாம். அவர்களை கவுரவித்தலால் கிடைத்திடும் நன்மைக்காக அவர்களிடம் பழகத் தேவையில்லை. அவ்வாறு பழகினால் பகவானுக்கு எதிரியாவது உறுதி. எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நடவடிக்கைகள் தூய்மையாக இருக்கும். மற்றவர்களிடம் குறைகளைத் தேடாதீர்கள். குறையில்லா மனிதன் இல்லை. மற்றவர்களிடம் குறை தேடும் அதிகாரம் எவருக்கும் இல்லை. உங்களுக்கு தேவையானவை எல்லாம் இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இருத்தல் வேண்டும்.

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:

என்கிற பகவான் வாக்கின்படி நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்